கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி கோயில் நடை அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜை, விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை, சண்முகர் ஜெபம் உள்ளிட்டவை நடைபெற்றன.
இதையடுத்து, மூலவர் கதிர்வேல் முருகர், வள்ளி, தெய்வானை சமேத கார்த்திகேயர் சுப்பிரமணியருக்கு 21 வகை மூலிகைகளால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை ஹரி பட்டர், சுப்பிரமணிய பட்டர் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில், மண்டகப்படிதாரர் சுவாமிநாதன் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சண்முகர் சன்னதியிலும், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண முருகர் சன்னதியிலும் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.