அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அம்மன் மற்றும் தட்சணாமூர்த்தி கற்சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
திருமானூர் கொள்ளிடம் ஆற்றின் பரிசல் துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிலர் குளிக்கச் சென்றனர். அப்போது, மண்ணில் புதைந்த நிலையில் 2 அடி உயரம் கொண்ட அம்மன் கற்சிலை, ஒன்றரை அடி உயரம் கொண்ட (மார்பு அளவு உடைந்த) தட்சணாமூர்த்தி சிலை கிடந்துள்ளது.
இதைக் கண்ட மக்கள் திருமானூர் போலீஸாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சிலைகள் இரண்டும் மீட்கப்பட்டு திருமானூர் கைலாசநாதர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.