அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து வயலில் இறங்கியதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
திருமானூர் அருகேயுள்ள தூத்தூர் கிராமத்தில் இருந்து காமரசவல்லி கிராமம் வழியே தஞ்சாவூருக்கு 42 பயணிகளுடன் அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்தை ராஜ்குமார் ஓட்டிவந்தார். காமரசவல்லி கிராமத்துக்குச் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்குள்ள வயலில் இறங்கி மரத்தில் மோதி நின்றது. இதில் பேருந்தில் பயணம் செய்த தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (19), ஷீலா (17), சந்தோஷ் (19) ஆகியோர் காயமடைந்தனர்.
இவர்களை அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டு அரியலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.