அரியலூர் மாவட்டத்தில் ஏதெனும் குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணில் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரியலூர் மாவட்டத்தில் வழக்கமாக இரவுப் பணியில் மூன்றில் ஒரு பங்கு போலீஸார் ரோந்து மற்றும் சுற்றுக் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ.ரா. ஸ்ரீனிவாசன் உத்தரவுப்படி சனிக்கிழமை இரவு அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படையில் உள்ள அனைத்து போலீஸாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு சிறப்பு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு மாவட்டம் முழுவதும் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டியோர், அதிவேகமாக வாகனம் ஓட்டியோர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியோர் மற்றும் இதர வழக்குகள் உட்பட 290 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், வங்கிகள், நகை கடைகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றை கண்காணித்தும், பழைய குற்றவாளிகளை சோதனை செய்தும் இரவு முழுவதும் காவல் அதிகாரிகளும், காவலர்களும் விழிப்புணர்வு கண்காணிப்பில் இருந்து குற்றங்கள் நடைபெறாமல் பணி மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து இதுபோன்று, அடிதடி வழக்குகள் மற்றம் திருட்டு வழக்குகளில் கைது செய்யமாலிருக்கும் குற்றவாளிகளை பிடிக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு தனிப்படை அமைத்து விரைவில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். தங்கள் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடந்தால் 94981- 81224 என்ற காவல் கட்டுப்பாட்டறை தொலைபேசியில் தெரிவிக்கலாம்.