அரியலூர் மாவட்டம் தளவாய் அருகே கல்லூரி மாணவனைத் தற்கொலைக்கு தூண்டியதாகப் பேராசிரியர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்கு பதிந்தனர்.
தளவாய் அருகேயுள்ள ஆதனக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தட்சிணாமூர்த்தி(19). கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் தனது சொந்த பெரியப்பா மகனின் திருமணத்துக்குச் செல்ல திருமண அழைப்பிதழைக் காட்டி, வகுப்பு ஆசிரியர் வேல்முருகனிடம் விடுமுறை கேட்டிருந்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் தட்சிணாமூர்த்தி விடுமுறை எடுத்து விட்டு செப். 7 ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றுள்ளார். அப்போது பேராசிரியர் வேல்முருகன், அனைவரின் முன்னிலையில் வேல்முருகனைத் தகாத வார்த்தையால் திட்டி கன்னத்தில் அரைந்தாராம்.
இதனால், விரக்தியில் இருந்த வேல்முருகன் வெள்ளிக்கிழமை(செப்.7) இரவு எலி மருந்தைத் தின்று மயங்கிக் கிடந்துள்ளார். இதையடுத்து, உறவினர்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தட்சிணாமூர்த்தி அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 15 ஆம் தேதி இரவு உயிரிழந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை(செப்.17) தட்சிணாமூர்த்தி சாவுக்கு காரணமாக பேராசிரியர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி உறவினர்கள் தளவாய் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். இதையடுத்து, போலீஸார் தற்கொலைக்கு தூண்டியதாக வேல்முருகன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.