அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த திருமழபாடியில் உள்ள அருள்மிகு சுந்தராம்பிகை உடனாகிய வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், திருக்கோயில் திருத்தொண்டர் பக்தர் பேரவை சார்பில் உழவாரப் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரவைத் தலைவர் மாரிமுத்து தலைமையில் மதுரையில் இருந்த வந்த திருத்தொண்டர்கள், கோயிலைச் சுற்றி முளைத்துள்ள முள்புதர்களை அகற்றினர்.
கோயில் வளாகத்தை தூய்மை செய்தனர். சுவாமிகளுக்கு பயன்படுத்தப்படும் திருவாசிகள்,விளக்குகள், தாம்பூலங்களை துலக்கி தூய்மைப்படுத்தினர். பின்னர் அவர்கள் ஒவ்வொரு சுவாமி சன்னிதிகளை நீரினால் கழுவி சுத்தம் செய்து, கோலமிட்டு விளக்கேற்றி வழிப்பட்டனர். முன்னதாக வந்திருந்த திருத்தொண்டர்கள் அனைவரையும் கோயில் செயல் அலுவலர் அருண் பிரசாத் வரவேற்றார். கோயில் குருக்கள் கணேஷ் நன்றி தெரிவித்தார்.