பிளாஸ்டிக்கைத் தவிர்த்து பாரம்பரிய சணல் மற்றும் துணி, காகிதப் பைகளை உபயோகப்படுத்த வேண்டும் என ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒரு முறை பயன்படுத்தி தூக்கிஎறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடை கடந்த ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதில் பாலி புரப்பிலீன் மற்றும் பாலி எத்திலீனால் ஆன பிளாஸ்டிக் பைகளும் (தடிமன் வேறுபாடின்றி) அடங்கும்.
பாலி எத்திலீனால் ஆன பிளாஸ்டிக் கைப்பைகளை மக்கள் பரவலாக பயன்படுத்தி வந்ததால், அதன் இயல்புகளை நன்கு அறிந்தனர். அதே சமயத்தில் பாலி புரப்பிலீன் பைகள் (நெய்யப்படாத கைப்பைகள்), அமைப்பு, வண்ணம் மற்றும் இயல்பில் துணிப்பைகள் போலவே இருப்பதால் மக்களால் துணிப்பை எனத் தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.
மேலும் இவ்வகை நெய்யப்படாத பைகளின் கூறு பாலி புரப்பிலீன் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நெய்யப்படாத கைப்பைகளும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகளே ஆகும்.
இந்த புத்தாண்டில், தமிழகம் தனது பயணத்தை பிளாஸ்டிக் மாசில்லா மாநிலமாக தொடங்கப்பட்டிருந்தாலும், இவ்வகை நெய்யப்படாத கைப்பைகள் இனிப்பு அங்காடி, மருந்தகம், உணவகம், துணி கடைகளில் துணி பைகள் எனத் தவறாக கருதப்பட்டு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் இதுபோன்ற பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் நெய்யப்படாத கைப்பைகளை தவிர்த்து பாரம்பரிய சணல், துணி மற்றும் காகிதப் பைகளை உபயோகிக்க வேண்டும்.