கோடைக்காலத்தில் குடிநீர் தடுப்பாட்டைப் போக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு இ-சேவை மைய ஆணையருமான சந்தோஷ் கே. மிஸ்ரா உத்தரவிட்டார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்தது:
அரியலூர் மாவட்டத்தில் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் அனைத்துப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து ஆழ்குழாய்க் கிணறுகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து அனைத்து அலுவலர்களும் கண்காணித்து, அவற்றில் பழுது ஏற்பட்டிருந்தால் உடனடியாக பழுது நீக்கி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
பழுது ஏற்பட்டிருக்கும் காலங்களில் அதை நிவர்த்தி செய்யும் வகையில் தற்காலிக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து,பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்துக்கு ஆட்சியர் மு. விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, நகராட்சி ஆணையர்கள் அரியலூர் திருநாவுக்கரசு , ஜயங்கொண்டம் வினோத் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு: முன்னதாக செந்துறை ஒன்றியம், கட்டையன் குடிகாடு கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பொன்பரப்பி கிராமத்தில் செயல்படும் இ-சேவை மையம், அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.