அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பில் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 61,586 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது.
அரியலூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற முகாமில் அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் கலந்து கொண்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கி முகாமைத் தொடக்கி வைத்தார். ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார். ஜயங்கொண்டம் எம்.எல்.ஏ.ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார்.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி, வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாரயணன், வட்டார மருத்துவ அலுவலர் உமா மகேஸ்வரி, நகர்ப்புற மருத்துவமனை மருத்துவர் நிரஞ்சனா, வட்டாட்சியர் கதிரவன், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்க நகர்ப்புறங்களில் 46 , ஊரகப் பகுதிகளில் 503 என மொத்தம் 549 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 6 நடமாடும் மருத்துவக் குழு மூலமாகவும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் மற்றும் முக்கிய பொது இடங்களிலும், மேலும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து சிமென்ட் தொழிற்சாலைகளின் பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வசிப்பவர்களின் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த மையங்களில் பொது சுகாதாரத் துறையின் 154 பணியாளர்களுடன் அங்கன்வாடி பணியாளர்கள், பிற துறை 1,129 பணியாளர்கள், 779 தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள்,131 மாணவர்கள் என மொத்தம் 2,193 பேர் பணிபாற்றினர். இப்பணிகளுக்கு 35 அரசு துறை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.