மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தேர்தல் ஆணைய புதிய செயலி மூலம் தங்களது சுய விபரங்களை பதிவு செய்தால், வாக்குச்சாவடியில் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மு.விஜயலட்சுமி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 1,710 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தத் தொகுதியில் 7 லட்சத்து 28 ஆயிரத்து 368 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 31 ஆயிரத்து 315 பெண் வாக்காளர்களும், 52 இதர வாக்காளர்களும் என மொத்தம் 14 லட்சத்து 59 ஆயிரத்து 735 வாக்காளர்கள் உள்ளனர்.
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எவ்வித சிரமமும் இன்றி வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதன் மூலம் அவர்களது செல்பேசியில் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தியுள்ள செயலியில் தங்களைப் பற்றி முழு விவரங்களை பதிவு செய்துகொண்டால், அவர்கள் வாக்களிக்கத் தேவையான உபகரணங்கள் அவர்கள் வாக்களிக்கக் கூடிய வாக்குப் பதிவு மையத்தில் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்படும் என்றார்.