அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.1,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஆண்டிமடம் அருகேயுள்ள ஓலையூர், குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரா. அருள்பாண்டியன் (25). மாற்றுத்திறனாளி . இவரது தந்தை ராமலிங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அருள்பாண்டியன் தனது தந்தை பெயரில் உள்ள சொத்தை தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலர் சுமதியை அணுகியுள்ளார். அதற்கு அவர் ரூ.1,000 லஞ்சமாக தரவேண்டும் எனக் கேட்டதாகத் தெரிகிறது.
இதற்கு உடன்படாத அருள்பாண்டியன் அரியலூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் அறிவுறுத்தலின் படி, ரசாயனம் தடவிய ரூ.1,000 நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் சுமதியிடம், அருள்பாண்டியன் திங்கள்கிழமை கொடுத்துள்ளார். அப்போது திட்டமிட்டபடி மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுமதியை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.