அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட வாகன தணிக்கையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 54 பறிமுதல் செய்யப்பட்டன.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜயங்கொண்டம் அருகேயுள்ள மகிமைபுரத்தில் தேர்தல் பறக்கும்படை அலுவலரும், வட்ட வழங்கல் அலுவலருமான ஆனந்தவேல் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, கல்லாத்தூரில் இருந்து ஜயங்கொண்டம் நோக்கிச்சென்ற இருசக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது, உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 54 இருந்தது தெரியவந்தது. விசாரணையில், மேலணிகுழியில் இயங்கி வரும் தனியார் நுண்கடன் நிறுவனத்தின் ஊழியர் மணிகண்டன் ரொக்கத்தைக் கொண்டு சென்றது தெரியவந்தது. எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்து ஜயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.