மக்களவைத் தேர்தலில் தொகுதிக்கு 100 பேர் போட்டியிட வேண்டும் என்று அரியலூர் அருகே பிரசாரம் செய்த விவசாயிகளுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அவர் திரும்பிச் சென்றனர்.
மக்களவையில் விவசாயிகளின் குரல்கள் ஒலிக்க வேண்டும், அதற்கு தொகுதிக்கு 100 விவசாயிகள் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் தனதுபிரசாரத்தை தொடங்கிய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் பல்வேறு பகுதிகளில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, சில விவசாயிகளுடன் இணைந்து அரியலூர் மாவட்டம், செந்துறைக்கு தங்க.சண்முகசுந்தரம் மற்றும் விவசாயிகள் பிரசாரம் செய்ய வந்தனர்.
அப்போது அங்கு வந்த செந்துறை போலீஸார், அனுமதி இல்லாமல் பிரசாரம் செய்யக் கூடாது. மீறி செய்தால் கைது செய்யப்படுவீர் என எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து தங்க. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பிரசாரம் செய்யாமல் திரும்பிச் சென்றனர்.