அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகிலுள்ள மேலவரப்பன்குறிச்சி காலனித் தெரு மக்களுக்கு நிரந்தர வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கீழவரப்பன்குறிச்சி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மேலவரப்பன்குறிச்சி புதுகாலனி தெருவில் வசித்துவரும் மக்களுக்கு நிரந்தர வீட்டுமனைப் பட்டா அரசு வழங்க வேண்டும் . அங்கு மகளிர் சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும்.
மேலும் மேலராமநல்லூர்- கீழராமநல்லூர் இடையே இணைப்புச்சாலை அமைத்து தர வேண்டும் . ஏலாக்குறிச்சி புனித அடைக்கல மாதா திருத்தலம் முன்பு பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலர் புனிதன் தலைமை வகித்தார். ஓன்றியகுழு உறுப்பினர்கள் ஆரோக்கியநாதன், சுகந்தி முன்னிலை வகித்தனர். முன்னதாக சகாயமேரி வரவேற்றார். ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.