அரியலூரில் பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் வாகனத் தணிக்கை பணியினை தேர்தல் செலவினப் பார்வையாளர் துர்காதத் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு மூன்று வீதம் 6 தொகுதிகளில் 18 பறக்கும் படை, 18 நிலையான கண்காணிப்புக் குழுவினர் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், புதன்கிழமை அரியலூரிலிருந்து குன்னம் வழியாக செல்லும் வாகனங்களை மறித்து சோதனை செய்து கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படையினரின் பணிகளை தேர்தல் செலவினப் பார்வையாளர் துர்காதத்,பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர்,போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாமல்,சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும் துரிதமாக சோதனை செய்ய வேண்டும் என்று தேர்தல் பறக்கும் படையினரை அறிவுறுத்தினார்.
மேலும், சிதம்பரம் (தனி) மக்களவைத் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தொடர்பான புகார்களை தனது 8925096095 செல்லிடப்பேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்புக் கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றார்.
இந்தஆய்வின்போது, வட்ட வழங்கல் அலுவலர் பழனிச்செல்வன் மற்றும் காவல் துறையினர், அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.