வரும் 20-ம் தேதி அரசுப் பணியாளர்களுக்கு தடகளம், குழுப்போட்டிகள் நடைபெற உள்ளன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பில் நடைபெறும் தடகளப்போட்டியில் ஆண்களுக்கு 100 மீ., 200 மீ., 800 மீ., 1500 மீ.ஓட்டப்பந்தயங்களும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் பெண்களுக்கு 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ.ஓட்டப்பந்தயங்களும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும், குழுப் போட்டியில் கூடைப்பந்து, கபடி, கையுந்துபந்து, கால்பந்துப் போட்டி (ஆண்களுக்கு மட்டும்) கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், இறகுப்பந்து, டென்னிஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகள் கரூர் ஆபிசர்ஸ் கிளப் மைதானத்திலும் நடைபெற உள்ளன.
அரசுத் துறைகளில் பணிபுரியும் முழு நேர அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்கலாம். மின்சாரத் துறை, காவல்துறை, மற்றும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் சீருடைப் பணியாளர்கள் பங்கேற்க இயலாது. அரசு அலுவலகங்களில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுவோர் பங்கேற்க இயலாது. போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது.
வெல்வோர் கரூர் மாவட்டத்தின் சார்பாக மாநிலப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர். அவர்களுக்கு கரூர் மாவட்டத்தின் சார்பில் விளையாட்டுச் சீருடைகள் வழங்கப்படும். தடகளப் போட்டியில் ஒருவர் ஏதேனும் 2 போட்டியில் மட்டுமே பங்கேற்கலாம். ஒரு அலுவலகத்திலிருந்து எத்தனை பேர் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் தங்கள் அலுவலகத்தில் பெறப்பட்ட அடையாள அட்டையைக் கொண்டு வருதல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9444-753260.