பெட்ரோல், டீசல் வரியை ஜிஎஸ்டி வரம்புக்குள் அமல்படுத்த வேண்டும் என கரூர் மாவட்ட வர்த்தக தொழில் கழகம் வலியுறுத்தியுள்ளது.
கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் பொதுக் குழுக் கூட்டம் சின்னாண்டாங்கோவிலில் அண்மையில் நடைபெற்றது. தலைவர் வழக்குரைஞர் ராஜூ தலைமை வகித்தார். செயலர் கே.எஸ். வெங்கட்ராமன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பி. செல்வம் கடந்தாண்டு வரவு, செலவு அறிக்கையை வாசித்தார்.
கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை வரும் ஜன.1 முதல் தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதுவரை அதிகாரிகள் வணிகர்களுக்கு எந்தத் தொந்தரவும் செய்யக்கூடாது. மேலும் மத்திய அரசு 2022-ம் ஆண்டு வரை பிளாஸ்டிக்கை பயன்படுத்த கால நீட்டிப்பு செய்துள்ளது. இதைத் தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும்.
கரூரில் நகராட்சி கடைகளுக்கு ஒரே மாதிரியான வாடகை முறையை அமல்படுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தில் கடுமையான சரத்துக்களை நீக்கி சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் வரியை ஜிஎஸ்டி வரம்புக்குள் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர்கள் தங்கவேலு, லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.