மணவாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 12.39 கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம், மணவாடி ஊராட்சிக்குட்பட்ட மணவாடி, பிஸ்மி காலனி, அய்யம்பாளையம் காலனி, பெருமாள்பட்டி காலனி, மருதம்பட்டி காலனி, மாணிக்கபுரம், கத்தாழபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட அவர் பின்னர் கூறியது:
அனைத்து மாநிலங்களிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ வேண்டுமெனப் பாடுபட்டார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர் அரசின் உதவிகளைப் பெறாத மக்களே இல்லாத நிலையை உருவாக்கி காண்பித்தார். அவரது வழியில் தமிழக அரசு இன்று பெண்களின் நிலை உயர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திருமண நிதியுதவி மற்றும் அரை பவுன் தாலிக்கு தங்கம் வழங்கியதை உயர்த்தி, 1 பவுனாக வழங்கும் திட்டம், வேலைக்குச் செல்லும் மகளிருக்கு அம்மா ஸ்கூட்டர் என எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. மணவாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் பிற துறைகள் மூலம் 1,146 பணிகள் ரூ.12.39 கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதாமணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ். கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.