விதிமீறி மது விற்க மது கடத்திய இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து வேன் மற்றும் 1,662 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அடுத்த பண்டிபானை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கரூரில் கோவைச்சாலையில் உள்ள ஓட்டல் முன் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இரவு நேரங்களில் மதுக்கடைகளில் மது வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பாராம்.
இந்நிலையில் புதன்கிழமை மதுக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்க ராயனூர் அரசு மதுக்கடையில் இருந்து ராயனூர் தில்லை நகரைச் சேர்ந்த தங்கராஜ் (59) என்பவரது வேனில் செவ்வாய்க்கிழமை இரவு 1662 மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு ரமேஷ் கடையை நோக்கிச் சென்றுள்ளனர்.
வேனை கரூர் தாந்தோணிமலை காமராஜர் தெருவைச் சேர்ந்த அருண்குமார்(26) ஓட்டிச் சென்றார். இதுகுறித்த தகவல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரனுக்கு வந்துள்ளது. அவரது உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் திருமாநிலையூரில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே அருண்குமார் ஓட்டி வந்த வேனை மடக்கி சோதனை செய்தபோது மதுபாட்டில்கள் கடத்திச் செல்வது கண்டறியப்பட்டு, அருண்குமாரையும், தங்கராஜையும் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்களையும், வேனையும் பறிமுதல் செய்தனர்.