தாந்தோணிமலை வெங்கடரமண சுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் கொடுப்பவராகவும், திருமலைக்குச் செல்ல இயலாமல் போன சோமசர்மா என்ற பக்தருக்கு மனமிறங்கி திருப்பதி வெங்கடாஜலபதியாக தானாகத் தோன்றி காட்சியளித்த கல்யாண வெங்கடரமண சுவாமி வீற்றிருக்கும் தாந்தோணிலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசித் திருவிழா கடந்த 13 ஆம் தேதி துவஜாரோஹணம் எனும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்று வந்தது. தொடர்ந்து கோயிலில் கடந்த 19 ஆம் தேதி திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
தொடர்ந்து, கோயிலில் சனிக்கிழமை புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையடுத்து கோயிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதிகாலை பூதேவி, ஸ்ரீதேவி மற்றும் கல்யாண வெங்கடரமண சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து வரும் அக்டோபர் 6, 13 ஆம் தேதிகளில் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் சி.கல்யாணி, உதவி ஆணையர்கள் சூரியநாராயணன், நா.சுரேஷ் ஆகியோர் செய்துள்ளனர்.