அரவக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை அமமுக சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தடை விதித்த காவல் துறையினர் மீது நீதிமன்ற வழக்கு தொடருவோம் என்றார் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அமமுக சார்பில் செவ்வாய்க்கிழமை க. பரமத்தி கடைவீதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருந்தது. இதையடுத்து பந்தல் அமைக்கும் பணிகளை திங்கள்கிழமை காலை அக்கட்சியினர் துவங்கினர். இந்நிலையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் அங்கு வந்த போலீஸார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் போராட்டத்திற்கு தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார். தகவலறிந்து அங்கு வந்த முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியிடம் இதுதொடர்பான நகலை போலீசார் அளித்தனர்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தொகுதி மக்கள் கோரிக்கைகளை சட்டப்பேரவையில் முன் வைத்து ஓராண்டு ஆகியும், எடப்பாடி அரசு எந்தவித திட்டங்களையும் செய்யவில்லை. எனவே, 3 இடங்களில் உண்ணாவிரதம் நடத்த 8.9.2018 அன்று காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்தோம். அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்ற கடிதத்தை கடந்த 21.9.2018-இல் போலீசாரிடம் கொடுத்துவிட்டோம். கடைசிநேரத்தில் காவல் துறையினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம் என அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் காவல்துறையினர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தொடர்வோம் என்றார். இதையடுத்து உண்ணாவிரத பணிகளை கைவிட்டு அக்கட்சியினர் கலைந்து சென்றனர்.