அதிக வட்டித்தருவதாக கூறும் நிதிநிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கரூர் மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமலும், தங்களது நிறுவனங்களை முறையாக பதிவு செய்யாமலும் இயங்கி வரும் பல போலி நிதிநிறுவனங்கள், ஆட்டுப்பண்ணை, நாட்டுக்கோழி, ஈமு கோழி , மாட்டுப் பண்ணைத் திட்டங்கள், கொப்பரைத்தேங்காய் பண்ணைத்திட்டம், தங்கநகைகள் முதலீட்டுத்திட்டம் மற்றும் வாரச்சீட்டு, மாதச்சீட்டு, தினசரி சீட்டு போன்றவற்றின் மூலமாக அதிக வட்டி தருவதாகவும், குறைந்த காலத்தில் இருமடங்கு தருவதாகவும் ஆசை வார்த்தைக் கூறி கவர்ச்சிகரமாக அறிவித்து மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள். இவர்களை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். பொதுமக்கள் முதலீடு செய்யும் முதலீட்டுத்தொகை முழுவதையும் மோசடி நபர்களிடம் இருந்து மீட்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.
எனவே பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்யும் முன் அந்நிறுவனங்களை பற்றி முழுமையாக விசாரித்தும், அந்த நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று நடத்தப்படும் நிறுவனமா, என உண்மையை தெரிந்துகொள்ளாமல் முதலிடூ செய்ய வேண்டாம். அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.