சாலையோர தடுப்புச்சுவரில் கார் மோதி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் இறந்தார்.
கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினம், மாயனூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். இவரது மகன் அருள்(20), நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மரைன் இன்ஜினியரிங் பிரிவில் மூன்றாமாண்டு படித்து வந்தார். இவர் வியாழக்கிழமை மாலை காரில் மகாதானபுரம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புலியூர் அடுத்த குளத்துப்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது கார் திடீரென நிலைதடுமாறி சாலையோர தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த அருள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த வெள்ளியணை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.