கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு தேவை
தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் செயல்படுத்தப்படவுள்ள சிறப்பு நிதியுதவி திட்டத்திற்கான கணக்கெடுப்பு பணிக்கு வரும் அலுவலர்கள் கேட்கும் விவரங்களை பயனாளிகள் வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வரால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட ஊரக, நகர்ப்புற மற்றும் பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள விவசாய தொழிலாளர்கள் மற்றும் இதர மிகவும் ஏழ்மை நிலையிலுள்ளவர்களுக்கு ஒரு முறை மட்டும் வழங்கப்படும் சிறப்பு நிதியுதவி திட்டத்திற்கான கணக்கெடுப்பு பணி கரூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இதற்காக அலுவலர்கள் ஒவ்வொரு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளார்கள்.
எனவே, கணக்கெடுப்பு பணிக்காக வரும் அலுவலர்களுக்கு கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி செய்திட ஏதுவாக பயனாளிகள், நல வாரியத்தில் உறுப்பினராக இருந்தால் அதற்கான அடையாள அட்டையையும், தற்சமயம் வருமானவரி செலுத்துபவராக இருந்தால் பான்அட்டையையும் மற்றும் ஆதார் கார்டு எண், வங்கிக்கணக்கு எண் போன்ற விவரங்களையும் வழங்க வேண்டும்.