ஏழைகளும் பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
கரூர் அமராவதி ஆற்றில் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்களையும் சனிக்கிழமை அகற்றி சுத்தம் செய்யும் பணியை ஆய்வு செய்த அவர், மேலும் கூறியது:
போக்குவரத்துத் துறையில் 2000 எலக்ட்ரிக்கல் பேருந்துகளை புழக்கத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக 500 எலக்ட்ரிக்கல் பேருந்துகள் சென்னை, மதுரை மற்றும் கோவை பகுதிகளில் பயன்பாட்டுக்கு வரும். மேலும், சுற்றுச்சூழல் மாசு இல்லாத 12,000 பேருந்துகளையும் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்குள் 14,000 பேருந்துகளை போக்குவரத்துத் துறையில் கொண்டு வர ஜெர்மனியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் போக்குவரத்துத் துறை மூலம் திரி பை டு என்ற குறைந்த செலவில், குறைந்த தூரத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நெடுந்தூரப் பயணத்துக்கு மட்டுமே குளிர்சாதனப் பேருந்து என்ற நிலையை மாற்றி, குறைந்த தூரத்துக்கும் இத்தகைய பேருந்துகளை விரைவில் முதல்வர் தொடக்கி வைக்கவுள்ளார். முதற்கட்டமாக சென்னையில் 50 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதிமுக கூட்டணிக்கு தேமுதிக விரைவில் வந்துவிடும். நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும். அதிமுக-பாஜக கூட்டணி தான் மெகா கூட்டணி என்றார் அவர்.