கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண உற்ஸவத்தில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் தேரோட்ட விழா கடந்த 13 ஆம் தேதி துவஜாரோஹணம் எனும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி பூத வாகனம், ஹம்ச வாகனம், மயில் வாகனம் போன்றவற்றில் உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து சனிக்கிழமை திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.
இதில் அதிகாலையில் சுவாமி மற்றும் வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 12 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். வரும் 21
ஆம் தேதி திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து வரும் 22 ஆம் தேதி தேனு தீர்த்தத்தில் தீர்த்தவாரியுடன் விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் சொக்கலிங்கம் செட்டியார், செயல் அலுவலர் வெ.ராசாராம் ஆகியோர் செய்துவருகின்றனர்.