முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கரூரில் வரும் 29 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2018 - 19 ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் வரும் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்பவர்கள் 31.12.2018 அன்று 21 வயதுக்குள்பட்டவராக இருத்தல் வேண்டும். (1.1.1998 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்). போட்டிகளில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வசித்து வருவதற்கான புகைப்படத்துடன் கூடிய சான்றினை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட போட்டிகளில் கலந்து கொள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சொந்த மாவட்டத்திற்காகவோ, பணிபுரியும் மாவட்டத்திற்காகவோ, பள்ளி கல்லூரியில் படிக்கும் மாவட்டத்திற்காகவோ விளையாட அனுமதிக்கப்படுவார்கள். பிற மாவட்டங்களில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் கரூர் மாவட்டத்தில் பங்கேற்க இயலாது. தடகளப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக காலை 9 மணிக்கு போட்டிகள் நடைபெறும் மையத்திற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017 03493 , 94447 53260 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.