பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் கறவை மாடு பராமரிப்பு மற்றும் காகிதப் பை தயாரிப்பு தொடர்பான இலவசப் பயிற்சி பெற அழைப்பு விடுத்துள்ளார் அதன் இயக்குநர் ஜெ. அகல்யா.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பாஸ்ட் புட் (துரித உணவு), கறவை மாடு பராமரிப்பு மற்றும் காகிதப் பை தயாரித்தல் குறித்த பயிற்சி வகுப்புகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற 18 முதல் மற்றும் 45-க்கு குறைவாகவும், எழுத, படிக்கத் தெரிந்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் பயிற்சியானது காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும். பயிற்சிக் காலத்தில் காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படுவதோடு, பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐ.ஓ.பி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநரிடம் பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட், 1 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைக்கவும். மேலும் விவரங்களுக்கு, 04328 277896 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.