பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள சின்னவெங்காய வணிக வளாகத்தில் ரசாயன பயிர் பாதுகாப்பு மருந்து தெளிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு தலைமை வகித்த ஆலந்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகரன், ரசாயன பயிர் பாதுகாப்பு மருந்துகள் கையாளும் தொழில்நுட்பம், பூச்சி மருந்து தெளிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து, ரோவர் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவிகள் மூலம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, பயிர் பாதுகாப்பு தெளிக்கும் உபகரணங்கள் 90 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், உதவி வேளாண்மை அலுவலர்கள் நல்லேந்திரன், மணிகண்டன், கலியபெருமாள், துரைசாமி மற்றும் செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், ஈச்சங்காடு, இரூர், மாவிலிங்கை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.