பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். ராஜமோகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் நமச்சிவாயம், இணைச் செயலர் கோ. சம்பத் ஆகியோர் முன்னனிலை வகித்தனர். மாவட்டச் செயலர் மா. ராஜேந்திரன் விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகளை சந்தித்துப் பேசுவதில் பாரபட்சம் காட்டும் செயலை சுட்டிகாட்டியதற்காக, சங்கத்தின் பொதுச்செயலருக்கு குற்ற குறிப்பாணை வழங்கி, சங்கத்தின் ஜனநாயக பூர்வமான நடவடிக்கைகளை முடக்க நினைக்கும் சுகாதாரத் துறை இணைச் செயலர் சுகவனத்தின் செயல்பாடுகளைக் கண்டிப்பது. 7.5.2013 ஆண்டு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்டச் செயலர் விஜயலட்சுமி, அனைத்து மருந்தாளுநர் சங்க நிர்வாகி ராஜராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் க. இளங்கோவன் நன்றி கூறினார்.