ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கூடாது என்பது எங்களது நிலைப்பாடு
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கூடாது என்பது தங்களது நிலைப்பாடு என்றார் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டி.ஆர்.பச்சமுத்து.
பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி:
மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில், கட்சியை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நேர்மையாக, வெளிப்படையாக நடைபெற வேண்டும். தமிழகத்தில் வேலைவாய்ப்பு அரிதாகிக் கொண்டிருப்பதால், ஸ்டெர்லைட் ஆலையை அவசரப்பட்டு மூட வேண்டாம் என கோரிக்கை வைத்தோம். ஆனால், சில சக்திகள் போராட்டம் காரணமாக அந்த ஆலை மூடப்பட்டது. இதனால் 10 ஆயிரம் பேர் நேரடியாகவும், 30 ஆயிரம் பேர் மறைமுகமாக வேலை இழந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடாது என்பது எங்களது நிலைப்பாடு. அவசியமான பிரச்னைகளுக்கு தேவைப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம். ஒரு அமைச்சர் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக ஆதாரத்துடன் கூறப்பட்டதும், அவர் பதவி விலகி இருக்க வேண்டும். அல்லது பதவியிலிருந்து விலக்கி வைத்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அவருக்கு கட்சியில் உயர்ந்த பதவி வழங்கப்பட்டிருக்கிறது. கட்சியில் உள்ள குறைகளை அந்த அமைச்சர் வெளியே சொல்லிவிடுவார் என்ற அச்சத்தில் பதவி வழங்கியிருக்கலாம் எனக் கருதுகிறேன் என்றார் டி.ஆர்.பச்சமுத்து.