பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சுண்ணாம்புக் கல் குவாரியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 2 கல்லூரி மாணவர்களில் மற்றொருவரின் உடலும் சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிகாடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 9 பேர் சனிக்கிழமை மதியம் கோவிந்தராஜபட்டினம் கிராமத்தில் உள்ள சுண்ணாம்புக் கல் குவாரி குட்டைக்கு குளிக்கச் சென்றனர். அப்போது, நீச்சல் தெரியாததால் முகமது ரசீன் (18), அபுல் ஹசன் (18) ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் மாணவர்களின் உடல்களைத் தேடும் பணி தொடங்கியது. இதில், சனிக்கிழமை மாலை அபுல் ஹசன் உடல் மீட்கப்பட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முகமது ரசீன் உடல் தேடும் பணி தொடர்ந்து நீடித்தது.
பின்னர், முகமது ரசீன் உடல் நள்ளிரவு மீட்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடலும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.