அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலைதேடும் மாணவ, மாணவிகளுக்கு அவ்வப்போது வெளியிடப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயின்ற பலர், பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி 2 இல் வெளியிடப்பட்டுள்ள தேர்வுக்கான பல்வேறு பதவிகளை உள்ளடக்கிய 1,199 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட தேர்வில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்று வெற்றி பெறும் நோக்கில் இலவச பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (செப். 24) முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி அரங்கில் நடத்தப்பட்டு வருகிறது.
பயிற்சி வகுப்பில் தொடர்ந்து பயில்பவர்களுக்கு இலவசப் பயிற்சிக் கையேடு வழங்கப்பட உள்ளது.
அவ்வப்போது மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் கடவுச்சீட்டு அளவு புகைப்படம், குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த கணினி வழி விண்ணப்ப நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.