விண்வெளி வாரவிழா கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் உலக விண்வெளி வாரத்தை ( அக். 4 முதல் 10 வரை) முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன.
மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் இதுதொடர்பாக திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தைச் சேர்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கட்டுரைப்போட்டியில் பங்கேற்கலாம். 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விண்வெளி சுற்றுலா எனும் தலைப்பிலும், 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வேற்று கிரகத்தில் ஒன்றுபட்ட குடியிருப்பு என்னும் தலைப்பிலும் போட்டிகள் நடைபெற உள்ளது. கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அவரவர் கையெழுத்தில் ஏ 4 அளவு தாளில் 2 ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒரு பக்கம் மட்டுமே எழுதியிருக்க வேண்டும். இக்கட்டுரைகள் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் The Administrative Officer, ISRO Propulsion Complex, Mahendragiri P.O., Tirunelveli District, Pin - 627 133 எனும் முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04637-281210, 281940 அல்லது 94421 40183, 94860 41737 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.