மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு, பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயில் மாசி மகத் தேரோட்டம் பிப். 19-ல் நடைபெறுகிறது. இதையொட்டி கொடியேற்றத்துடன் கடந்த 11 ஆம் தேதி திருவிழா தொடங்கியது. வரும் 18 ஆம் தேதி வரை நாள்தோறும் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், சேஷ வாகனம், சூரியபிரபை, சந்திரபிரபை வாகனம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. இதில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அனந்தவள்ளி சமேத சந்திரசேகர சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும் நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு புஷ்பக விமானத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.திங்கள்கிழமை (பிப். 18) கைலாச வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. நகரின் பிரதான வீதிகள் வழியாக தேர் வலம் வந்து மாலையில் நிலைக்கு வந்தடையும். 20 ஆம் தேதி கொடியிறக்கமும், 23 ஆம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.
முன்னதாக, கோயில் அருகே தேரோட்டம் நடத்துவதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மணி, தக்கார் முருகையா, முன்னாள் அறங்காவலர்கள் பெ. வைத்தீஸ்வரன், சரவணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்கின்றனர்.