விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் அறிமுகம்
பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு நாள் கூட்டத்தில், வாக்காளர்களர்களுக்கான விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா திங்கள்கிழமை வெளியிட்டார்.
ஆட்சியரக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியர், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 358 மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் வே.சாந்தா உத்தரவிட்டார்.
தொடர்ந்து, வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகத்தை செல்லிடப்பேசியில் ஒட்டும் ஸ்டிக்கரைஆட்சியர் சாந்தா வெளியிட்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, தனித்துணை ஆட்சியர் மனோகரன்,மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மஞ்சுளா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கல்குவாரி மீது நடவடிக்கை: வேப்பந்தட்டை அருகே விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரி மீது நடவடிக்கை கோரி முகமதுபட்டினம், பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட கிராம மக்களும், வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அரும்பாவூர்
பேரூராட்சிக்குள்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களும், நிலப்பட்டா வழங்கக் கோரி எறையூர் சர்க்கரை ஆலைக்குள்பட்ட பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களும் மனு அளித்தனர்.