பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில், ரூ. 2 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்களை காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி.
இங்கு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு) தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), தொழிலாளர் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர், தொழிலாளர் நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 9 அறைகளுடன், பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒரே இடத்தில் பெறும் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்களை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி. தொடர்ந்து, மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா (பெரம்பலூர்), மா. சந்திரகாசி (சிதம்பரம்) ஆகியோர் முன்னிலையில், குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினார் ஆட்சியர்.