கொடநாடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எள்ளளவும் தொடர்பு இல்லை என்றார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம்.
பெரம்பலூரில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஒன்றிய செயலர் செல்வகுமார் தலைமையில், 200 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம் முன்னிலையில் சனிக்கிழமை இணைந்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியது:
கோடநாடு சம்பவத்தில் முதலமைச்சருக்கு எள்ளளவும் தொடர்பு இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழப்புக்குப் பிறகு, கடந்த 2 ஆண்டகளாக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கி வருகிறார் தமிழக முதல்வர். அதிமுக தற்போது வலிமையான இயக்கமாக உருவாகி வருகிறது. மேலும், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார் அவர்.
பேட்டியின்போது, மாவட்ட செயலரும், குன்னம் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.டி. ராமச்சந்திரன், பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா, மா. சந்திரகாசி ஆகியோர் உடனிருந்தனர்.