பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் தொடங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமை வகித்தார். மகளிர் திட்ட இயக்குநர் சு. தேவநாதன், வாக்காளர் விழிப்புணர்வு மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான பயிற்சி அளித்தார்.
அனைத்து அலுவலங்களிலும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறையிலும் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்கள் முதல் ஒப்பந்தப் பணியாளர்கள் வரையுள்ள அனைத்து அலுவலர்களையும் உறுப்பினர்களாக சேர்த்து, அவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்பட்டுள்ள கையேட்டில் குறிப்பிட்டுள்ள செயல்பாடுகளை பயிற்சி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.