பொன்னமராவதி ஒன்றியத்தில் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் மற்றும் தேசிய அடைவுத்தேர்விற்கு பிந்தைய செயல்பாடுகள் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி வட்டார வள மையத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் வே.நாராயணன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆர்.செல்வக்குமார், வட்டாரக்கல்வி அலுவலர்கள் சே.ராமதிலகம், பால் டேவிட் ரொசாரியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சியில், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் 40 ஆசிரியர்கள் பங்கேற்றனர். பயிற்சியில், கற்றல் விளைவுகள் குறித்து கருத்தாளர்கள் வே. நாராயணன், சசி குமார் ஆகியோர் விளக்கினர். இனிவரும் காலங்களில் வகுப்பறை செயல்பாடுகளில் கற்றல் விளைவுகள் தலைப்பே முக்கியத்துவம் பெற இருக்கிறது என வலியுறுத்தப்பட்டது. பயிற்சி ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் வட்டார வள மைய நிர்வாகமும் இணைந்து செய்திருந்தனர்.