கந்தர்வகோட்டையில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் ஜி.சிங்காரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எ.பழனியாண்டி, துணைச் செயலாளர் ஆர்.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.காமராஜ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மருத்துவக் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். மருத்துவ பரிசோதனைக் கட்டணம், சிகிச்சை செலவுகளை வழங்க வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் என்.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். முடிவில், வட்டாரப் பொருளாளர் ஆர்.ராஜப்பா நன்றி கூறினார்.
விராலிமலை: இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் துரைச்சாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார்.
முன்னதாக, வட்டச் செயலாளர் ஜோஷி வரவேற்றார். பொருளாளர் பழனிவேலு நன்றி கூறினார்.
அறந்தாங்கி: அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட கிளைத் தலைவர் எஸ்.அப்பாத்துரை தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன், இணைச்செயலாளர் வெள்ளச்சாமி, அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் கே.காமராஜ், வருவாய்த்துறை வட்டத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவப்படி ரூ.1,000 வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வட்ட கிளைச் செயலாளர் நம்பிராஜன் நன்றி கூறினார்.