புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் 6 லட்சம் தென்னை மரங்களும், 35 ஆயிரம் பலா மரங்களும் முழுமையாக சேதமடைந்துள்ளது முதல்கட்டக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது என்றார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
தொடர்ந்து கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கஜா புயல் பாதிப்பு- மீட்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: புயலுக்கு பிறகான மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மின் கம்பங்களைச் சீரமைக்கும் பணி மிகப்பெரிய சவால் மிகுந்த பணியாக காணப்படுகிறது. தற்போது இப்பணிகளில் மட்டும் 3 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆந்திரத்தில் இருந்து ஆயிரம் பணியாளர்களும், பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரம் பணியாளர்களும் விரைவில் வரவுள்ளனர்.
மின்சாரத்தை விரைவில் வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான பாதிப்புகளைக் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டக் கணக்கெடுப்பின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 லட்சம் தென்னை மரங்களும், 35 ஆயிரம் பலா மரங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு, முந்திரி, சோளம், நெல் ஆகியவையும் முழுமையாக சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
கணக்கெடுப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட ஒரு விவசாயி கூட விடுபடாமல் நிவாரணம் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றார் விஜயபாஸ்கர். கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.