விராலிமலை, அன்னவாசல் ஒன்றியப் பகுதிகளில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், ஆரியூர், புதூர், மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் பெரியவர்கள், சிறியவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதல் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த மழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.