அன்னவாசல் அருகே திசையாயிரத்து ஐநூற்றுவர் கல்வெட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அருகே திசைவிளங்கு திசையாயிரத்து ஐநூற்றுவர் வணிகக் குழுவின் கல்வெட்டு இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அருகே திசைவிளங்கு திசையாயிரத்து ஐநூற்றுவர் வணிகக் குழுவின் கல்வெட்டு இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது.
அன்னவாசல் அருகேயுள்ள செல்லுகுடியில் பழமையான கல்வெட்டு இருப்பதாக எல்லைப்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர் எஸ். பூவரசன், பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் எஸ். கஸ்தூரிரங்கன் ஆகியோர் அளித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மங்கனூர் ஆ. மணிகண்டன், தலைவர் மேலப்பனையூர் கரு. ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் மு. முத்துக்குமார், உறுப்பினர் ம.மு. கண்ணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அக்கல்வெட்டைப் படித்தனர். 
அப்போது அக்கல்வெட்டு கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மெய்க்கீர்த்தியுடன் கூடிய  திசைவிளங்கு திசையாயிரத்து ஐநூற்றுவர் வணிகக் குழுவின் கல்வெட்டு எனத் தெரியவந்தது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வுக்கழக நிர்வாகிகள் கூறியது:
இதுவரை தென்னிந்திய வணிகர் குழுக்களின் கல்வெட்டுகள் தமிழகத்தில் 118 என இதுவரை 314 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் மன்னருக்கு இணையான உரிமைகளுடன் மதிப்பு மிக்கவர்களாக வணிகர்களும், அவர்தம் பதினெண் கொடி வீரக்கொடியாரும் கருதப்பட்டது தெரிகிறது.
குறிப்பாக சோழர்களின் காலத்தில் இத்தகைய வணிகர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வந்ததோடு அந்நாட்டிலுள்ள மன்னர்களோடு இணக்கமான உறவையும் கொண்டிருந்தனர். எனவே, பெரும்பாலும் பக்கத்து நாடுகளுக்கு தூதுவர்களாக வணிகக் குழுவை சேர்ந்தோரே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதையும் வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. 
புதுக்கோட்டை மாவட்டம் செல்லுகுடியில் கிடைத்த கல்வெட்டு மன்னர்களுக்கு இணையாக திசையாயிரத்து ஐநூற்றுவர் என்னும் வணிகக் குழுவின் மெய்க்கீர்த்தியுடன் உள்ளது. இதில் காலம் குறிப்பிடப்படவில்லை. எனினும் முதலாம் ராசேந்திரச் சோழன் பெயர் உள்ளதாலும், எழுத்தமைதி மற்றும் மெய்கீர்த்தியின் அடிப்படையிலும் இக்கல்வெட்டு கி.பி.11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது உறுதியாகிறது. 
ஐந்தடி உயரமுள்ள ஒரு கல்லின் நான்கு பக்கமும்  83 வரிகளில் எழுதப்பட்டுள்ளது.  இதன் உச்சியில் சங்கு, செங்கோல், அரிவாள், குத்துவிளக்கு ஆகியவை கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளன.
"ஸமஸ்த புவநாத' எனத் தொடங்கும் இக்கல்வெட்டில் 7 மங்கள வரிகளில் ஸ்ரீ வாசு தேவர், கண்டழி, மூலபத்திரர் போன்றோரின் வழிவந்த ஐயப்பொழில்புர ஸ்ரீபரமேஸ்வரிக்கு மக்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
பின், நிலாவைத் தொடும் அளவிலான மாட வீதிகளைக்கொண்ட 18 பட்டனமும் (துறைமுக நகரங்கள்), 32 வேளாபுரமும் (இரண்டாம் நிலை வணிக நிறுவனங்கள் அடங்கிய பாதுகாப்பான நகரங்கள்), காவல் வசதியுடன் வணிகர்களுக்கு பொருள்களைச் சேமித்து வைப்பதற்கான கிட்டங்கிகளுடன் கூடிய 64 கடிகைத் தாவளமும் இருந்ததாகவும் அவ்வணிகக் குழு பற்றிய பெருமைகள் கூறப்படுகின்றன. 
இக் குழுவில் பலதை (வீரர்) பதினெண் கொடி வீரக்கொடிகொடியார், செட்டி சீர்புத்திரன் (வீரர்), கவறை (வணிகர்), காசியவன் விடுத்த காமுண்ட சுவாமி (நிலக்கிழார்), உருத்திரன் விடுத்த ஓலை வாரியன் (கணக்கு எழுதுபவர்), சீரிய செண்டாவனும் (சிறு பணி செய்பவர்) இருந்தனர் எனப் பொறிக்கப்பட்டுள்ளது. 
பலா மரம், மாமரம், வாழை, பாக்கு மரம், முல்லை மலர் கொடி, குயில், கிளியும் குழுமியிருப்பதாகவும், துன்பங்கள் ஏதுமின்றி, ஒன்றாகக் கூடி  இருந்ததையும், அங்கே ஐந்நூற்றுவர் செங்கோலை முன்னிறுத்தி  நேர்மையுடன்,  ஆயிரம்  திசைகளிலும், செழிப்புற ஐநூற்றுவர் வணிக  நிர்வாகம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது . 
பாதுகாப்புப் பணியிலும், குழுவின் மிக உயர்ந்த பொறுப்பிலும் இருந்த பதினெண் கொடியார், பழ வீரசிங்கன், வலங்கை பாவாடை வீரன், கடிபுரத்து முனைவீரர் பற்றியும் கல்வெட்டு கூறுகிறது. சிங்கன் என்ற பெயர் அரிதாகவே வணிக கல்வெட்டுகளில் காணப்படுவதால் இக்கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது. 
முதலாம் ராஜராஜன் காலத்திலேயே வலங்கை , இடங்கை அமைப்புகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.  வலங்கை பிரிவில் மேம்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள், தொழில் வர்க்கத்தினரும், இடங்கைப் பிரிவில் சிறு தொழில் செய்யும் குடியினரும் இருந்துள்ளதை சான்றுகள் மூலம் அறிய முடிகிறது.  வலங்கை வல்லபர் என்ற குழுத் தலைவரே தம்மை ராசேந்திர சோழர் வலங்கை என்று அடையாளப்படுத்திக் கொள்வதோடு தனது தனி அடையாளமாக பதினெண்கொடி வீரக்கொடி வலங்கை என அழைத்துக் கொண்டு இக்கல்வெட்டைப் பொறித்துள்ளார். 
கல்வெட்டின் நான்காவது பக்கம் சிதைந்துள்ள போதிலும்  இறுதி வரிகள் தெளிவாக உள்ளன, இதில்  குழுவினர் செல்லுக்குடிக்கு வழங்கிய கொடை பற்றிய செய்தியானது  "குடுத்தோம் பதினெண் கொடி வீரகொடி  வலங்கை வல்லபர்  செல்விகுடிக்கு" என  நிறைவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் இவ்வூருக்கு நற்பணி செய்வதற்கான சாசனக் கல்வெட்டாக இதைக் கருதலாம். 
பாதுகாப்பு வீரர்களும், வணிகர்களும், கைவினைஞர்களும், சிறு தொழில் செய்வோரும், நிலக்கிழார்களும் இணைந்து உருவாக்கிய இந்தக் கூட்டுறவு வணிகம் நம்பகத்தன்மை உடையதாகவும், பொருள் விற்று லாபத்தின் ஒரு பகுதியை பொதுக் காரியங்களுக்கு செலவிட்டிருப்பதையும், பின் வருங்காலங்களில் நிலம் உள்ளட்டவற்றின் வருவாயின் குறிப்பிட்ட பகுதி நலத் திட்டங்களுக்கு வழங்கியிருப்பதையும் கல்வெட்டுகள் மூலம் மக்களுக்கு அறிவித்துள்ளதையும் அறிய முடிகிறது. 
பண்டைய உலக வரலாற்றில் கூட்டுறவு வணிகத்தை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மேற்கொண்ட போதும், தெற்காசியாவைப் பொறுத்தவரை தென்னிந்திய வணிகர்களான ஐந்நூற்றுவரே தனக்கான முறையான நிர்வாக கட்டமைப்புகளுடனும், நிதி வருவாயை தமக்குள் முறையாக பகிர்ந்து கொள்வது குறித்த வரையறையையும் கொண்டிருந்ததோடு, சூழலுக்கேற்றவாறு மன்னர்களுடன் உறவை ஏற்படுத்தி செயல்படும் அரசியல் நுட்பங்கள் நிறைந்தவர்களாகவும் இருந்துள்ளனர் என்றார் அவர்.
மேலும்  இக்கல்வெட்டின் முழுமையான வாசிப்பு பற்றிய கட்டுரையை அக்டோபர் மாதம் நடக்கும் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை மாநாட்டில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் , 
இந்த முக்கியமான கல்வெட்டு குறித்து தமிழ்நாடு தொல்லியல் துறை, இந்திய தொல்லியல் துறைக்கும் கல்வெட்டின் புகைப்படங்களை அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இக்கல்வெட்டை ஆய்வு செய்ய உறுதுணையாக செல்லுகுடி பெரியவர் வீராசாமி , முன்னாள் மாணவர்  ரகுபதி , பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் சஞ்சய் , நிகல்யா, ரம்யா, சிவகுமார் ஆகியோர் செயல்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com