புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வுப் போட்டிகளில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற பொன்னமராவதி வட்டார பள்ளி மாணவ, மாணவிகளை முதன்மைக்கல்வி அலுவலர் இரா. வனஜா செவ்வாய்க்கிழமை பாராட்டினார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. வினாடி வினா போட்டியில் பொன். புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பர்ஜானா பேகம், கலைச்செல்வி ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடத்தையும், பேச்சுப்போட்டியில் மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி மாவட்ட அளவில் 3-ம் இடத்தையும் பெற்றனர்.
இந்த மாணவிகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா. வனஜா, இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் கே. குணசேகரன் ஆகியோர் பாராட்டினர். இடைநிலைக்கல்வி உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு, பள்ளித் துணை ஆய்வாளர் வேலுச்சாமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.