வங்கியில் நகை திருட்டு வழக்கில் சிறை சென்று வந்தவரை, போலீஸார் துரத்திச் சென்ற போது மரத்தில் கார் மோதியதில் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.கோபாலகிருஷ்ணன்(39). இவர் குளத்தூரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் 2014 நவம்பர் மாதம் 29ஆம் தேதி 19 கிலோ தங்க நகைகளை திருடியதாக கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, பல்வேறு திருட்டு வழக்கில் சிக்கிய இவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதிலிருந்து அண்மையில் வெளியே வந்த கோபாலகிருஷ்ணனை கீரனூர் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை விசாரிக்க ஊருக்குச் சென்றனர்.
போலீஸார் வந்த விவரம் அறிந்த கோபாலகிருஷ்ணன் காரில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
அவரைப் பின்தொடர்ந்து போலீஸார் விரட்டிச் சென்றனர். ஆம்பூர்பட்டி நான்கு சாலை அருகே சென்ற போது கோபாலகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணன் நிகழ்விடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.