புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் சனிக்கிழமை கோடை மழை பெய்தது.
அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நிலவும் வெப்பம் காரணமாக பகல் நேரங்களில் வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்த்து வந்தனர். கடும் வெப்பநிலை காரணமாக நிலத்தடி நீர் குறைந்த காரணத்தால் ஆழ்துளை கிணறுகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என பொதுமக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில், காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்துவந்தது. அறந்தாங்கியில் நண்பகல் பெய்த அரை மணிநேர மழை காரணமாக கடும் வெப்பம் குறைந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
விராலிமலை: அன்னவாசல் இலுப்பூர் பகுதிகளில் சனிக்கிழமை இடியுடன் கூடிய மழை பரவலாக பெய்ததால் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இலுப்பூர், அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. சுமார் 30 நிமிடம் பெய்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.