புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துக் கட்சி ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தி அமைதியை உருவாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரியை சனிக்கிழமை இரவு நேரில் சந்தித்த இவ்விரு கட்சிகளின் நிர்வாகிகள் அளித்த மனு:
ஒரு சமூகத்துப் பெண்களை இழிவுபடுத்தி வெளியிடப்பட்ட கட்செவி அஞ்சல் ஒலிப்பதிவால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே, தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்துக் கட்சியினரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தி மாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் மு. மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன் உள்ளிட்டோர் ஆட்சியரைச் சந்தித்தனர்.