புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி களப்பக்காட்டில் வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் 2 பேர் காயமடைந்தனர்.
களப்பக்காடு ஆலமரத்து முனீசுவரர் திருக்கோயில் 14 ஆம் ஆண்டாக நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டில், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 14 காளைகள் பங்கேற்றன. வடத்தில் கட்டப்பட்டு நின்று விளையாடும் வகையில், ஒவ்வொரு காளைக்கும் 25 நிமிஷம் ஒதுக்கப்பட்டது. ஒரு காளைக்கு 10 வீரர்கள் வீதம் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
14 காளைகளில் ராமநாதபுரம் மாவட்டம், காஞ்சிராங்காடு ஆதித்தன் காளையும், கோவில்பட்டி விஜயன் அழகுபாண்டி காளையும் பிடிபடவில்லை வெற்றி பெற்ற காளைகளுக்கும், பிடித்த மாடு பிடிவீரர்களுக்கும் பீரோ, கட்டில், சேர், குக்கர், அண்டா மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகளைப் பிடித்த 2 வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மஞ்சுவிரட்டில் பங்கேற்ற கால்நடைகள் மருத்துவர்களின் பரிசோதனைக்கப் பின்னர் அனுமதிக்கப்பட்டன. ஏராளமானோர் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்வைக் கண்டுகளித்தனர்.