கும்பகோணத்தில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து கடந்த 10 நாள்களில் அபராதமாக 50 ஆயிரம் ரூபாயை போக்குவரத்து போலீஸார் வசூலித்துள்ளனர்.
தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பிடித்து அபராதம் விதிக்குமாறு போக்குவரத்து போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதன்படி, கும்பகோணம் நான்கு சந்திப்பு சாலை, உச்சிப்பிள்ளையார் கோயில், பாலக்கரை, மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடந்த 10 நாள்களாக கும்பகோணம் டிஎஸ்பி கமலக்கண்ணன் மேற்பார்வையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருள்செல்வன் தலைமையில் போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் போக்குவரத்து விதிமீறல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சிக்னல் விதிமீறல், மூன்று பேர் வாகனத்தில் செல்லுதல், தலைக்கவசம் அணியாதது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில் கடந்த 10 நாள்களில் மட்டும் ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.